×

போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை..!!

சென்னை: போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின்போது, வாட்ஸ் அப் குழு மூலம் பலருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8 கிராம் மெத்தப்பிட்டமைன் என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருவல்லிகேணியை சேர்ந்த சுல்தான் என்பவர் மூலம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்தது தெரியவந்தது. காதர் மொய்தீன் அளித்த தகவல் அடிப்படையில் சுல்தான், அலாவுதீன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரிடம் நடத்திய விசாரணையில் திருவான்மியூரை சேர்ந்த ராகுலிடம் போதைப்பொருளை வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ராகுலை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். அதில் ராகுல் என்பவர் நீச்சல் குளம் தொடர்பான பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருவதும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் ராகுலின் வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பின் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை திருவான்மியூரில் உள்ள ஜெயக்குமார் உறவினர் ராகுல் வீட்டில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையரின் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருளை ராகுல் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விலை உயர்ந்த போதைப்பொருள் என்பதால் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்து சென்னையில் இருக்கக்கூடிய நபர்களுக்கு போதைமாத்திரை சப்ளை செய்யக்கூடிய பணியில் ஈடுபட்டாரா? கல்லூரி மாணவர்களுக்கு ஏதேனும் சப்ளை செய்தாரா? என தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், வண்ணாரப்பேட்டையில் உள்ள காதர் மொய்தீன் என்பவர் வீட்டிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 8 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,ex-minister ,Jayakumar ,forces ,CHENNAI ,-minister ,WhatsApp ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி